கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு திருக்கதவு திறத்தலுடன் நேற்று மாலை ஆரம்பமானது.
நேற்று மாலை பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அன்னையின் அடையாளங்கள் எழுந்தருளல் நடைபெற்றதுடன் ஊர்வலமாக வடபத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களுடன் தமிழ் மந்திரங்களுடன் இந்த திருச்சடங்கு நடாத்தப்பட்டுவருகின்றது.
அம்மன் அடையாளங்கள் ஆலயத்தினை வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஐந்து தினங்கள் நடைபெறும் ஆலய திருச்சடங்கில் நாளை திங்கட்கிழமை மாலை ஊர்காவல் திருஉலாவும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகமும் மாலை நோற்பு கட்டுதல் நடைபெற்ற கடல்குளிப்பும் நடைபெறவுள்ளது.
புதன்கிழமை காலை அன்னையின் தீமதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து ஆயுதபூஜையும் நடைபெறவுள்ளது.