வற் வரியை செலுத்தத் தவறிய இரு நிறுவன பணிப்பாளர்களுக்கு 6 மாத கால சிறை!

 

இரண்டு வருடங்களுக்கான 3 கோடியே 25 இலட்சத்திற்கும் அதிக வற் வரியை செலுத்தத் தவறிய நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க தலா 6 மாத கால சிறைத்தண்டனையை விதித்துள்ளார். 

பாதுக்கை பகுதியில் உள்ள அச்சக வர்த்தக பணிப்பாளர்கள் இருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வற் வரியை அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதன்படி, வற் வரியைச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைச் சவாலுக்கு உட்படுத்தி பிரதிவாதிகள் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 

எவ்வாறாயினும், பிரதிவாதிகள் சார்பில் நேற்றைய தினம் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, வரிப்பணத்தை ஒரே தடவையில் செலுத்தக்கூடிய வசதி தமது கட்சிக்காரர்களுக்கு இல்லையெனவும், அதற்காக 5 வருட நிவாரண காலத்தை வழங்குமாறும் கோரியிருந்தார். 

எனினும், அதனை நிராகரித்த நீதவான் அந்த வற் வரியை நேற்றைய தினத்திற்குள் செலுத்துமாறு உத்தரவிட்டார். 

நேற்றைய தினத்திற்குள் வற் வரியை செலுத்த வழியில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். 

இதனை ஆராய்ந்த நீதவான், பிரதிவாதிகள் இருவருக்கும் தலா 6 மாத கால சிறைத்தண்டனையை விதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *