தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு! அரசை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ

  

தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசாமல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஒரே நாளில் இவை அனைத்துக்கும் இணக்கம் தெரிவித்தமை கவலைக்குரியது  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.   

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வேட்புமனுவில் கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

 நான் நாட்டுக்கும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் இன்னும் எஞ்சியுள்ளன. எனவே இம்முறையும் பாராளுமன்றத்துக்கு மக்கள் என்னை அனுப்புவார்கள் என்று நம்புகின்றேன்.  

பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட முன்னரும் கூட என்ன நடக்கும் என்பதை நான் தெரிவித்திருந்தேன். தற்போதைய ஜனாதிபதியின் கீழ் பொருளாதார வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது கடினமானதாகும்.  

பாராளுமன்றத்தில் இவை தொடர்பில் விவாதிப்பதற்கு என்னைப் போன்றவர்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்று எண்ணுகின்றேன்.

புதிய அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நான் தயாராக இல்லை. அவர்களுக்கு இன்னும் சிறிது காலம் வழங்கப்பட வேண்டும். ஆனால் சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது.  

தேசிய கடன் மறுசீரமைப்பின் போது வேலை செய்யும் மக்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டது.

அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஒரே நாளில் இவை அனைத்துக்கும் இணக்கம் தெரிவித்தமை கவலைக்குரியது. 

அத்தோடு இவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பிலும் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. 

அடுத்த பாராளுமன்றத்தில் இதற்காக போராடுவேன். தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாகவே ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக குரல் கொடுப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *