விளையாட்டினால் குடும்பமொன்றை தள்ளிவைத்த கிராம பொது அமைப்பினர்- தமிழர் பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

முல்லைத்தீவு  வட்டுவாகல் கிராமத்தில் கிராம மட்ட அமைப்புக்களால் வளர்ந்து வரும் கால்பந்து வீரர் சிவசுப்ரமணியம் ஜிந்துசன் குடும்பத்தினரை சமூகத்தில் இருந்து ஒதுக்கி சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம்(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் நான் வசித்து வருகின்றேன். 

ஆரம்பத்தில்  முல்லைத்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து விளையாடி வந்தேன்.  

எனக்கான சரியான  வாய்ப்பு கிடைக்கவில்லை பின்னர் முல்லைத்தீவு சென்யூட் கழகத்தினர் அதிக ஊதியத்துடன் கூடிய  விளையாட்டு துறைக்கு என்னை அழைத்திருந்தார்கள். என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் அவர்களது கழகத்திற்கு மாறி செல்கின்றமை தொடர்பாக எழுத்து மூலம் கடிதம் வழங்கியே விளையாட சென்றேன். 

அதன் பின்னர் நான் பல சவால்களுக்கு  முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அதனையடுத்து கிராம மட்ட அமைப்புக்கள் எம்மை எம் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவருடைய உறவினர் கருத்து தெரிவிக்கையில், 

எனது தங்கை குடும்பம் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளமையானது உண்மையிலே எமக்கு மன வேதனையளிக்கின்றது. 3கிலோ மீற்றர் சுற்றளவில் 215 குடும்பங்களை  கொண்டு காணப்படும் குறித்த கிராமத்தில் எனது தங்கை குடும்பம் வாழ்ந்து வருகின்றனர்.உண்மையில் இக்கிராமத்தில் வாழ்பவர்கள் அனைத்தும் உறவினர்கள்தான்.

இந்நிலையில் எனது தங்கை குடும்பத்தினரை குறித்த கிராமத்தில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டது தவறான விடயம்.

ஏனெனில் ஆலய நிர்வாகம் கலாசார கிளையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் யாப்பின் பிரகாரமே ஆலய செயற்பாடுகள் நடக்கின்றது. இருப்பினும் முடிவுகள் ஒருதலைபட்சமாகவே எடுக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று கமக்காரர் அமைப்பு அதன் யாப்பின்படியே நடக்கவேண்டும் , கிராம அபிவிருத்தி சங்கம்,  கிராம அபிவிருத்தி சங்கத்தினர் அதன் யாப்பின் படியே நடக்கவேண்டும். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை ஒரு குடும்பத்தின் மேல் திணிக்கும் நிலை இக்கிராமத்திலே இடம்பெற்றுள்ளது.

என்னுடைய மருமகன் சிறந்த விளையாட்டு வீரன் உதயசூரியன் விளையாட்டு கழகத்தில்  சிறிய வயதுகளில் விளையாடி வந்தான். அவரின் வளர்ச்சி காரணமாக இலங்கையில் இடம்பெற்ற வடமாகாண உதைபந்தாட்ட சுற்று போட்டியில் இடம்பிடித்து விளையாடி இருக்கின்றார். 

இந்நிலையில் அவ்வாறு வளர்ந்துவரும் சூழலில் சிறிய கிராமத்திற்குள் அவரின் வளர்ச்சியினை  மழுங்கடிக்க பொது அமைப்புக்கள் முனைவது மிகவும் வேதனைக்குரிய விடயமே.

ஏனெனில் அவரது வளர்ச்சியை உண்மையில் ஊக்கப்படுத்த வேண்டிய கிராம மக்கள் தங்கள் குறுகிய நோக்கத்திற்காக அந்த விளையாட்டு வீரனுடைய விளையாட்டினை முடக்குவது என்பது கண்டிக்கதக்க விடயமாகும். 

உண்மையில் இவர் எம் மாவட்ட சங்கத்தினரோடு இணைந்து விளையாடி கொண்டிருக்கின்றார். என் தங்கை மற்றும் மருமகனின் குடும்பத்தினரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைப்பதாக உதயசூரியன் விளையாட்டு கழகத்தினர் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அதில் ஆலய தலைவர் கையொப்பம் இட்டிருப்பது வேதனைக்குரிய விடயம். 

இந்த கிராமத்தில் கல்விமான்கள் அதிகம் உருவாக்கப்பட்டு பல இடங்களில் பெரிய பதவிகளில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் இந்த கிராம அமைப்புக்களில் இருப்பவர்களை எவ்வாறு சொல்வதென தெரியவில்லை. 

ஏனெனில் ஒரு முடிவை எடுக்கும் போது அது சரியா தவறா என சிந்தித்து செயல்பட கூட வல்லமை இல்லாதவர்கள் இக்கிராம  அமைப்புக்களில் பதவிகளில் இருப்பதனை அவர்களாகவே சுட்டிகாட்டியிருக்கின்றார்கள்.

உங்கள் கிராமம் வளர்ச்சியடைய வேண்டுமானால் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை, உணர்வுகளை  மதிக்கவேண்டும். அதன் அடிப்படையில் தான் எங்கள் கிராமத்தை செழிப்புற வைத்திருக்கமுடியும் என்பதை அமைப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது சகோதரி வசிக்கும் கிராமத்தில் ஆலயத்தினரால் ஆலயத்திற்கு வரகூடாது, ஆலயத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும்,  ஊரில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.இந்த காலகட்டத்தை விளங்கிகொள்ளே வேண்டும்.

ஏனெனில்உலகம்  வளர்ந்துவரும் நிலையில் இவ்வாறான முடிவை எடுக்கும் கிராமத்தினர் எங்கு நிற்கின்றார்கள் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

ஆகவே, இதற்கான  தீர்வு திட்டங்களை  பெறுவதற்கு நாங்கள் மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ்நிலையம், வடமாகாண ஆளுநர் உட்பட்ட அனைவருக்கும் நாம்  முறைப்பாடு வழங்கியிருக்கின்றோம்.அதற்கான ஆவணங்களையும் அனுப்பி இருக்கின்றோம். 

இதற்கான சட்ட நடவடிக்கை எடுத்து  தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கைவும் பொது அமைப்புக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் எனவும்  தெவித்திருந்தார்.

அத்தோடு வட்டுவாகல் ஆலயத்தினர், உதய சூரியன் விளையாட்டு கழகத்தினர், மாற்றுதிறனாளிகள் கன்னிகா குழு, வட்டுவாகல் கமக்காரர் அமைப்பு,வட்டுவாகல் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து குறித்த வீரரின் வளர்ச்சிக்கு இடையூறுவிதித்து குறித்த வீரரின் குடும்பத்தினரை சமூகத்தில் இருந்து ஓரம் கட்டி வைப்பதாக அறிவித்து தள்ளி வைத்துள்ளனர். இதனால் குறித்த குடும்பம் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply