புல்மோட்டை பகுதியில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்!

திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது. குறித்த சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றிருந்தது.

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்மலைக்குடா பகுதியில் இன்று (12) காலை பெண் ஒருவர் மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குறித்த பகுதியில் மயானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இதன்போது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை பொலிசார் சிலரை அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியது.

பின்னர் குறித்த விடயம் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த 2 ஏக்கர் காணியானது மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி எனவும் குறித்த பகுதியில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யுமாறு பிரதேச செயலாளர் தெரிவித்ததையடுத்து குறித்த பகுதியில் இருந்து பொலிசார் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த பகுதியை நீண்டகாலமாக மையவாடியாக தாம் பயன்படுத்தி வருவதாகவும் இதில் பல ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் உள்ள மக்களுடைய காணிகளை பூஜா பூமி என்றுகூறி அரிசிமலை விகாராதிபதி அபகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *