மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பி யின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும்- டக்ளஸ் தெரிவிப்பு..!

மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம். அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருக்கின்றது.

தற்போது மாற்றம் என்ற கருப்பொருளை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர்.

குறிப்பாக மக்கள் விரும்பும் மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்படுள்ளது.

அந்தவகையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த மாற்றம் வரவுள்ளதாக கணிக்கப்படுகின்றது.

இதேவேளை எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது.  அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை  மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன்.

அத்துடன் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும்  வலுவாகவே இருக்கின்றது.

அதனால்தான் மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது என வலியுறுத்தி வருகின்றேன். 

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில்,  கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும். அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும்  வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *