புத்தளத்தில் பணம், மற்றும் தொலைபேசி திருட்டு!

புத்தளம் – பாலாவி பகுதியில் இயங்கி வரும் விடுதியொன்றில் இருந்து இன்று (20) அதிகாலை பணம் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ளதாக அந்த விடுதியின் உரிமையாளரினால் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியின் உரிமையாளர் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் விடுதியின் யன்னலை உடைத்துக் கொண்டு  உள்ளே சென்ற திருடன், அங்கிருந்து 62500 ரூபா பணம் மற்றும் உரிமையாளரின் 60000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்களை திருடியுள்ளான் என அந்த விடுதியின் உரிமையாளர் கே.ஏ.டபிள்யூ. ஜெயமான்ன தெரிவித்தார்.

அந்த விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் தான் படுத்துறங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பாரிய சத்தமொன்று கேட்டதாகவும் அவர் கூறினார்.

அதனையடுத்து, அறையை விட்டு வெளியே சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் வீடுதிக்குள் நிற்பதை கண்டதுடன், அந்த இளைஞனை பிடிப்பதற்காக முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

சுமார் 30 நிமிடங்கள் வரை அந்த திருடனான இளைஞனுடன் போராடியதாகவும், இதனால் தனது காலில் காயம் எற்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.

இறுதியில் அந்த திருடன் பணத்தையும், தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதேவேளை, குறித்த திருடன் பயன்படுத்தியதாக கூறப்படும் துவிச்சக்கர வண்டி மற்றும் ஒரு சோடி பாதணிகள், பெரிய கத்தி  என்பன அந்த விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *