மன்னாரில் சாத்திரம் பார்ப்பதாக கூறி சுய நினைவை இழக்கச் செய்து திருட்டு – CCTVயில் சிக்கிய பெண்

 

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு, சாத்திரம் பார்ப்பதாக கூறி சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து, சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை  காலை  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க  வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர்.

இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்ளனர். இதன் போது தான் சாத்திரம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம் பார்த்துள்ளார்.

இதன்போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில் குறித்த பெண் சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.

மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் சிறுவன் ஒருவருடன்  வீதியால் சென்ற CCTV விடியோ கட்சியும் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *