10 மாதங்களாக நியமிக்கப்படாத ஆசிரியர்; கேள்விக்குறியான மாணவர்களின் கல்வி! வவுனியாவில் போராட்டத்தில் குதித்த பெற்றோர்

 ஆசியரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி வவுனியா – செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தரம் 03ம் வகுப்புக்கான ஆசிரியர் கடந்த 10 மாதங்களாக நியமிக்கப்படாமையால் மாணவர்களின் கல்வி கேள்விக்குரியாகியுள்ளதாக தெரிவித்து பெற்றோர்கள் மற்றும்  மாணவர்களினால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், வலயமே கண்கொண்டு திரும்பிப்பார் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவர் தெரிவிக்கும்போது,

கடந்த 10 மாதங்களாக ஆசிரியர் இல்லாமலே குறித்த வகுப்பறை இயங்கிவருகின்றது. இதன் காரணமாக தங்களின் பிள்ளைகளின் கல்வி மட்டம் குறைவடைந்துள்ளது.

மேலும் தனது பிள்ளையின் பயிற்சி புத்தகமானது பெப்ரவரி மாத்தில் இருந்து திருத்தப்படாத நிலையில் இது தொடர்பாக குறித்த பாடசாலை அதிபரிடம் சென்று எனது பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றுவது தொடர்பாக கேட்டேன். 

அப்போது குறித்த பாடசாலையின் அதிபர், வலயத்திலே குறித்த வகுப்பில் ஆசிரியர் இன்மையால் பாடசாலையை மாற்ற உள்ளோம் என பேசும்படி தெரிவித்திருந்தார்.

இந்  நிலையில் தமக்கான தீர்வாக குறித்த வகுப்பிற்கான நிரந்தர ஆசிரியரினை நியமிக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *