மின்சக்தி மற்றும் வலுசக்தித்துறையை டிஜிட்டல் மயமாக்கல்; இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் அநுர!

இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விரிவான மீளாய்வு செய்யப்பட்டதுடன்,  அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும்  வலுப்படுத்துவது மற்றும் இருநாட்டு  மீனவ சமூகங்களின் தேவைகளைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம்  நீண்டகால தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

வடமாகாண கடல் பிரதேசத்தில் நிலவும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கை மீனவ சமூகத்தின் நலன்களை  பாதுகாப்பதில் தான் எப்போதும்  அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *