13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு : மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்

தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, சித்தார்த்தன் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சித்தார்த்தன் அவர்கள் தமது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையில்,

13வது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தலானது நடாத்தப்பட வேண்டும். அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

வடக்கில் வீதிகளையும், காணிகளையும் விடுவிப்பதாக கூறுகின்றனர். ஆனால் சில பகுதிகள் மாத்திரமே விடுவிக்கப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. அந்தப் பகுதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

நாங்கள் தேசிய கட்சியில் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. ஆனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏற்ப சூழ்நிலைகள் அந்த கட்சிகளுக்குள் காணப்படவில்லை.

தமிழ் பௌத்தமானது தமிழ் பௌத்தமாகவே பேணப்பட்டிருந்தால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் பௌத்தர்களும் இருந்திருப்பார்கள். தமிழ் பௌத்த தொல்லியல் சின்னங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் தொல்லியல் திணைக்களமானது மக்களது காணிகளை அபகரிக்கும் ஒரு நிலையிலேயே காணப்படுகிறது. ஆகையால் தமிழ் பௌத்த சின்னங்கள் கூட அழிவடையக்கூடி சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *