சந்தையில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு – அதிகரித்த விலை

 

சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை தாண்டி அதிகரித்து நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. 

அதன்படி ஒக்டோபர் 24 ஆம் திகதி ஜனாதிபதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் அதற்கு இணங்கியுள்ளனர்.

அத்துடன், நாட்டிலுள்ள நெல் மற்றும் அரிசியின் கையிருப்பு குறித்த தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய, நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஜனாதிபதியிடம் கடந்த நவம்பர் 06ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

ஆனால் சந்தையில் இன்னும் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், கிடைக்கும் அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் மக்களும் வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், நாட்டில் நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற அறிக்கையின் பிரகாரம் போதுமான அளவு நாட்டு அரிசி இருப்பதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நைமுதீன் குறிப்பிட்டுள்ளர்.

அரிசியின் விலையை அதிகரிப்பதற்காக சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *