தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல்- சுமந்திரனின் வாக்குறுதி தொடர்பில் தவராசா வேண்டுகோள்..!

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிட்ட, சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத்தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 7 ஆயிரத்து 496 வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

வெறும் மூன்று வார அவகாசத்துக்குள் நாம் தேர்தலை எதிர்கொண்டோம்.  இந்த மூன்று வாரத்துக்குள் எம்மீது நம்பிக்கை வைத்து 7 ஆயிரத்து 496 பேர் வாக்களித்திருக்கின்றனர். 

உண்மையில் இதை நாம் பெரியதொரு அடைவாகக் கருதுகின்றோம். 

தமிழ்த் தேசியத்தின் பாதையில், தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கையாகப் பயணிக்க வேண்டும் என்றே எமது கட்சி உருவாக்கப்பட்டது. 

அந்தத் தடம் மாறாத பாதையில் எங்களின் அரசியல் பயணம் தொடரும்.

தமிழரசுக் கட்சிக்கு மக்கள் தக்க செய்தியொன்றை சொல்லியிருக்கின்றனர். 

தமிழரசுக் கட்சியினர் மக்களின் ஆணையை ஏற்று அதன்படி நடக்க வேண்டும். 

சுமந்திரன் எனது நீண்ட கால நண்பர். நன்கு பழக்கப்பட்டவர்.  அவர் கொடுத்த வாக்குறுதியை ஒரு போதும் மீறியதில்லை. தேர்தலுக்கு முன்பாக, வேட்பாளர்களாகப் போட்டியிட்டுத் தேர்தலில் தோல்வியடைபவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை என்று அவர் கூறியிருந்தார். 

எனவே, தன் வாக்குறுதியை அவர் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *