மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும்வகையில் செயற்படமாட்டோம் – கலைச்செல்வி

சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம்.

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும்வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம்.”

என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ தேசிய மக்கள் சக்திக்கு மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கின்றது.

இது மூவின மக்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியாகும். இந்த வெற்றியை நாம் வரவேற்கின்றோம். மாற்றத்துக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் என் சார்பிலும், கட்சி சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நுவரெலியா மாவட்டமானது தேர்தல் காலத்தில் பாரம்பரிய இரு கட்சிகளுக்கு வாக்களிக்கப்படும் மாவட்டமாக பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்த நடைமுறை இம்முறை தோல்வி கண்டுள்ளது. எனவே, இந்த வெற்றி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

சாப்பாடு கொடுத்து, சாராயம் வழங்கி வாக்குகளைப் பெறுவதற்கு சிலர் முற்பட்டனர்.

இவை எவற்றுக்கும் அடிபணியாமல் தம்முடையை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மக்கள் கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மாற்று சிந்தனையை நோக்கி எமது மக்கள் காலடி எடுத்துவைத்துள்ளனர்.  

மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வீழ்த்தாமல் மலையக மக்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம்.

உண்மை ஒரு நாள் வெல்லும் என்பதே சமூக நியதி.

இத்தேர்தலில் அது நடந்துள்ளது.

எமது மக்களை வாக்கு இயந்திரமாகவே இங்குள்ள அரசியல் தரகர்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

இது தெரியவந்ததால்தான், சிறந்த தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் அரசியல் தரகர்களை தோற்கடித்துள்ளனர். இதுதான் உண்மையான மாற்றம்.”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *