முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ CID யில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையில் அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் நேற்று (21) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர். 

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த 18 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்றைய தினமும் (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 

அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னிலையாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *