விபத்தில் சிக்கிய பேருந்துகள் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த அரச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு,

நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று(25)  காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ் அரச பஸ்ஸை எதிர்திசையில் வந்ததை கண்டு பிரேக் போட்டதில் தனியார் பஸ்ஸின் பின்பகுதி நழுவி இ.போ.ச பஸ்ஸின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

தனியார் பஸ்ஸின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், 

நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 

விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *