முல்லையில் தொடர்மழை; 654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பு..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான  மழை காரணமாக  654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. 

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக  முல்லைத்தீவு  மாவட்டத்தில்  குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 243 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த 109 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 288 குடும்பங்களை சேர்ந்த 858 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 30 குடும்பங்களை  சேர்ந்த 93 பேரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 201 குடும்பங்களை சேர்ந்த 453 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை 8 மணியளவில்  வெளியிடப்பட்ட   மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள்  மீட்கப்பட்டு  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தமக்கள் ஒட்டுசுட்டான் கரிவேலன் கண்டல் அ.த.க. பாடசாலையில் , ஏனையவர்கள்  உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிசார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *