திருமலை- மட்டக்களப்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து சேவை பாதிப்பு..!

வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற கால நிலையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 483 பேர் பாதிக்கப்பட்டு இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் வெருகல் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய தற்காலிக இடைத்தங்கல் முகாமில் மாவடிச்சேனை, சேனையூர் கிராமங்களைச் சேர்ந்த 76 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேரும், வட்டவன் தான்தோன்றீஸ்வரர் வித்தியால இடைத்தங்கல் முகாமில் வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த 90 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேருமாக இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன.

வெருகல் மாவடிச்சேனை பகுதியில் உள்ள திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து நீர் பிரவாகம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வீதி ஊடாக பிரயாணம் செய்வோர் மிகுந்த அசௌகரிங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.

வெருகல் -முத்துச்சேனை வீதியில் நீர் பிரவாகம் காணப்படுவதால் கடற்படையினர் படகுச் சேவையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வெருகல் பகுதியில் உள்ள வயல் நிலங்கள் பலவும் நீரில் மூழ்கி வெள்ளக் காடாக காட்சியளிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *