சஜித் தரப்புக்குள் ஏற்பட்ட பிளவு; தனிவழி செல்ல தயாராகும் பங்காளிக் கட்சிகள்..!

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திர மக்கள் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நான்கு இடங்களுக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை.

அதற்காக தேசிய பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், ஜீ.எல். பீரிஸ் அத்துடன் தேர்தலில் தோல்வியடைந்த ஹிருணிகா பிரேமச்சந்திர, துஷார இந்துனில், ஈரான் விக்கிரமரத்ன, மனோ கணேசன், திஸ்ஸ அத்தநாயக்க போன்றவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை கோரியமையினால், ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *