பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் சீனத்தூதரின் கருத்து; கஜேந்திரகுமார் கண்டனம்..!

இலங்கையிலுள்ள சீனத்தூதர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள். 

இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன கருத்து கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிக்கிறது. இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான செயல் அல்ல என்பதோடு அவ்வாறான கருத்தை தூதுவர் ஒருவர் கூறக்கூடாது.

உண்மையில் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி விட்டார்கள் என கூற முடியாத நிலையில் சீனத் தூதுவர் எந்த அடிப்படையில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பில் கேட்க விரும்புகிறேன்.

தேசிய மக்கள் சக்திக்கு யாழ்.தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. மூன்றாவது ஆசனம் சுயேச்சை குழுக்கள் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்ததால் கிடைத்தது.

இம்முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை .

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெற்கை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய அங்கஜன், டக்ளஸ் போன்றோர் பெற்ற வாக்குகளை விட இம்முறை தேசிய மக்கள் சக்தி சுமார் 15,000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளனர்.

தெற்கு கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் ஒரு பகுதியினர் அங்கஜன், டக்ளஸை நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமையே உண்மையான விடயம்.

இவற்றை அறியாத சீனத் தூதுவர் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட தயாராகிவிட்டனர் என்ற கருத்தை கூறுவது ஒன்றில் கேட்ட கேள்வி விளக்கம் என்னால் கூறிய பதிலாக இருக்க வேண்டும்.அல்லது தமிழ் மக்களை வேண்டுமென்றே தவறான பாதையில் இட்டு செல்வதாக பார்க்க முடியும்.

தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு தமது ஆதரவை கொடுத்து வரும் நிலையில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் சீனத் தூதுவர் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டும்.

அதை விடுத்து பூலோக அரசியல் போட்டி காரணமாக சீனா தமது ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக இனவாத கருத்துக்களை தெரிவிப்பது ஆரோக்கியமான விடயமல் அல்ல.

ஆகவே, உலக வல்லரசில் ஒன்றாக சீனத் தூதுவர் தனது தூதுவர் பதவிக்கு பொருத்தம் இல்லாத விடயங்களில் தலையிடுவதையும் தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *