வெள்ளத்தால் வெருகலில் இடம்பெயர்வு

வெள்ளம் குறைவடைந்து வருகின்ற போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை- வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயம்.

வட்டவன் தான்றோறிஸ்வரர் இந்து மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் குறைவடைந்து வருகின்ற நிலையில் பல குடும்பங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெருகலில் தற்போது வட்டவன் -தான்றோறிஸ்வரர் வித்தியாலய முகாமில் வட்டவன் கிராமத்தின் 12 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் சேனையூர்,மாவடிச்சேனை கிராமங்களைச் சேர்ந்த 91 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேரும் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 179 குடும்பங்களின் 516 பேர் இரண்டு இடைத் தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.இன்றைய தினம் வெள்ள நீர் வடிந்த வீடுகளுக்கு சிலரை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இரண்டு முகாம்களிலும் உள்ளவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகளை நாம் செய்து வருகிறோம்.இச் செயற்பாட்டிற்கு தனியார் அமைப்புகள் , முப்படையினர் தமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு வெருகலில் வெள்ளம் குறைவடைந்து வருகின்ற நிலையில் தற்போதும் பல வீடுகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தோடு மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது.இதனால் இவ்வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் அசௌகரிங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காண முடிந்தது.

இருப்பினும் நேற்றையதைவிட இன்று குறைவான நீர் பிரவாகம் காணப்படுகிறது.

வெருகல் -முத்துச்சேனை வீதியில் நீர் பிரவாகம் காணப்படுவதால் கடற் படையினர் படகுச் சேவை மூலம் மக்களை ஏற்றி இறக்கி வருகின்றனர்.

அத்தோடு வெருகல் பிரதேசத்திலுள்ள பல வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. 

பொதுமக்கள் வெள்ளம் தொடர்பான தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *