அநுர அரசிடம் கையளிக்கப்பட்ட சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம்

 

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் 2015 ஆம் ஆண்டு சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.

பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், இரா.சம்பந்தனுக்கு அமைச்சரவைப் பத்திரத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமானது அவர் இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டது.

குறித்த உத்தியோகபூர்வ இல்லம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதுடன், அதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கடந்த காலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ இல்லம் கடந்த 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இரா.சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை.

இதன்படி, சம்பந்தன் உயிரிழந்து சுமார் ஐந்து மாதங்களின் பின்னர் தற்போது குறித்த இல்லம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *