கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 லட்சம் ரூபா பெறுமதியான பொதியை திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை – களுபோவில பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் பொதியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள், வெற்று இரத்தின பொதி பெட்டிகள், வர்த்தகரின் ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் பல பெறுமதியான பொருட்கள் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 28 ஆம் திகதி டோஹாவில் இருந்து கத்தார் எயார்வேஸ் விமானமான KR-632 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கு அவர் கொண்டு வந்த இரண்டு பொதிகளில் ஒன்று காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
ஒரு மாதத்திற்குள் இந்த சூட்கேஸ் குறித்த தகவல்களை தொழிலதிபருக்கு வழங்குவதாக உறுதியளித்தனர்.
அதற்கமைய மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பாதுகாப்பு கெமரா அமைப்பைக் கண்காணித்ததன் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், ஹெம்மாதகம – பெதிகம்மன பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தகரிடம் இருந்து திருடப்பட்ட பயணப்பொதி சந்தேக நபரால் எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.