ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம் – வவுனியாவில் முற்றுகை!

ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்ட கொழும்பை தலைமையாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபாய் பணங்களை அவர்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்து குறித்த நிறுவனத்தை வெளியேற விடாது முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் குறித்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது. குறித்த நிறுவனம்  வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளது. அந்நிறுவனத்தினரை வீட்டு உரிமையாளரான பாராளுமன்ற உறுப்பினர் வீட்டை விடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர்கள் அந்த வீட்டில் இருந்த தமது பொருட்கள், வாகனங்கள், உபகரணங்களுடன் வெளியேறினர்.

இதன் போது அங்கு சென்ற, குறித்த நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் வழங்கியோர், கிரவல் மண் வழங்கியோர், வாகனம் வழங்கியோர், வாகன திருத்துனர், சாப்பாடு வழங்கியோர் என பலரும் முற்றுகையிட்டு கடந்த 3 வருடமாக தமக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட பணம் வழங்கப்படாமல் உள்ளதால், அந்த பணத்தை வழங்கிய பின அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் இரு சாராரது கருத்துக்களையும் கேட்டதுடன், நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, குறித்த தனியார் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவினர் கொழும்பில் இருந்து வரவுள்ளதாகவும், அதுவரை குறித்த நிறுவனம் அவ் வீட்டில் இருந்து வெளியேற மாட்டார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்று முற்றுகையில் ஈடுபட்டோர் வெளியேறிச் சென்றனர்.

குறித்த நிறுவனம் தமக்கு ஒப்பந்த அடிபபடையில பல்வேறு விநியோகங்களை மேற்கொண்டவர்களுக்கு ஒன்றரை கோடிக்கு மேல் பணம் செலுத்தவில்லை என பொலிசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *