யாழில் மின்சார சபையினர் அடாத்தாக காணிக்குள் புகுந்து அடாவடி – ஆளுநரும் கைவிரிப்பு!

வலி வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து செல்லும் கிளை வீதியான கோணப்புலம் என்ற ஒழுங்கையில் இலங்கை மின்சார சபையினர் அனுமதி பெறாமல், அடாத்தாக மின்கம்பங்களை தனியார் காணிகளின் உள்ளேயும், காணிகளுக்கு வெளியேயும் நாட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அந்த மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வீதியின் மொத்த நீளம் 725 மீட்டர்கள். காங்கேசன்துறை வீதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து இந்த வீதியினூடாக உயர் மின்னழுத்த மின்சாரத்தினை பெறுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று முயற்சித்தது. இந்த வீதி மிகவும் ஒடுக்கமானது. அதாவது இந்த வீதியானது ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு அளவு என்ற வகையில் 15,16,17 அடிகள் அகலமாகவே உள்ளது. அத்துடன் இந்த வீதி 3,4 வளைவுகளையும் கொண்டது. 

இவ்வாறு உயர் மின்னழுத்த மின் கம்பங்களை நாட்டுவதால் போக்குவரத்துத்துக்கு இடையூறு, வீதி ஓரங்களில் உள்ள பயன்தரும் மரங்களுக்கு பாதிப்பு, கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் போன்ற விடயங்களை நாங்கள் மின்சார சபைக்கு சுட்டிக்காட்டினோம். அதற்கு மின்சார சபையானது, இது குறித்து பிரதேச சபையிடம் முறையிடுமாறு கூறியது.

அதன் அடிப்படையில் 15ற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களாகிய நாங்கள் பிரதேச சபையிடம் எழுத்து மூலமான ஆவணம் மூலம் முறையிட்ட வேளை, பிரதேச சபையினர், தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் மக்களுடன் கலந்துரையாடி முடிவினை எடுக்கும் படி இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தினர். ஆனால் மின்சார சபை இதைப்பற்றி பொருட்படுத்தவில்லை.

இதனால் நாங்கள் ஆளுநர் செயலகம், அரசாங்க அதிபர், ஜனாதிபதி செயலகம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இது குறித்து கடிதம் அனுப்பினோம்.  அதன் அடிப்படையில், மின்சார சபை சட்டத்தின் கீழ் மக்களுக்கு பாதிப்பு அல்லது இழப்பு ஏற்படும் என்றால் அது குறித்து பொதுமக்களது நட்ட ஈடு தொடர்பாக கருத்தில் கொண்டு, அவர்களுடன் கலந்துரைடி இலங்கை மின்சார சபை செயல்படும் என நம்புவதாக குடியிருப்பாளர்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியது.

அதன் பின்னரும் இரண்டு தடவைகள் மின்கம்பங்களை நாட்டுவதற்கு முயற்சித்த வேளை குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தவேளை அதனை இடை நிறுத்திருந்தனர். இதன்போது இலங்கை மின்சார சபையினர், தமது கடமைக்கு மக்கள் இடையூறு விளைவிப்பதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு பதிவு செய்தனர். இதன் போது மின்சார சபை அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் ஆகியோரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், இது பிரதேச சபையின் வீதி என்பதால் அவர்களிடம் அனுமதி பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

இது இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் (02) பொலிசாரின் பாதுகாப்புடன் வந்த மின்சார சபையினர் கம்பங்களை நாட்டுவதற்கு முயற்சித்தனர். இதன்போது கடந்த 10ஆம் மாதம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எங்களுக்கு அனுப்பிய கடிதத்தை காட்டினோம். அதில் “இந்த பகுதி எந்த பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அவர்களின் அனுமதியுடன் தான் மின்சார சபை கம்பங்களை நட்ட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை பார்த்துவிட்டு அதையும் மீறி காணிக்கு உள்ளேயும் வெளியேயும் மின்கம்பங்களை நாட்டினர்.

எதிர்பார இருக்கையில் நேற்றையதினம் ஆளுநரை சந்தித்த நாங்கள் குறித்த விடயத்தை அவரிடம் எடுத்துரைத்தபோது, பிரதேச சபை செயலாளருடன் கலந்துரையாடியே நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். பின்னர் பிரதேச சபை செயலாளரிடம் நேரில் சென்று மீண்டும் இன்றையதினம் ஒரு மனுவை கையளித்துள்ளோம்.

இதன்போது பிரதேச சபையின் செயலர் அவர்கள், பிரதேச சபையின் வீதியில் மின்கம்பங்களை நட்டு, கெங்கிரீட் போட வேண்டுமாக இருந்தால் என்ன படிமுறை என எனக்கு தெளிவு இல்லை. ஆகையால் இது குறித்து பதில் தருமாறு நகர சபை பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவர்களது பதில் வந்தால் தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என செயலாளர் தெரிவித்தார்.

மின்சாரத்தை பெற முயற்சிக்கும் குறித்த நிறுவனமானது எந்த விதமான பதிவுகளையும் இதுவரை செய்யவில்லை என பிரதேச சபை எமக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஆனால் மின்சார சபையானது அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மின்சாரத்தை வழங்குவதற்கு முயற்சி செய்கின்றது. பிரதேச சபையில் பதிவு செய்யப்படாத பெயர் செல்லுபடியாகுமா?

இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு உயர் அதிகாரிகள் மட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. குறித்த நிறுவனத்திற்கு சூரிய மின்கலம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறித்த மின்சாரம் வழங்கப்படுவது ஏன்? எனவே உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டப்பட்ட மின்கம்பங்கள் மீளவும் அகற்றப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *