அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில், பயிற்சியை தொடர்வதற்காக, கல்வி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம், கோரப்பட்ட.

விண்ணப்பங்களுக்கு முரணான வகையில், தற்போது நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (09) நடைபெறும் என கடிதம் மூலம் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரச பாடசாலைகளில் கற்பிக்கும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு இரண்டு வருட கால பயிற்சியினை வழங்குவதற்காக, இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

தமிழ் மொழி மூலமாக, கொட்டகல, மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை மற்றும் கோப்பாய் ஆகிய நான்கு கலாசாலைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி, ஆரம்பக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இஸ்லாம் ஆகிய 6 பாடங்களுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும் என அந்த வருத்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.   

இந்த நிலையில், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களும் வேறு வேறு ஆசிரியர் கலாசாலைகளுக்கு நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் மாத்திரமன்றி, நாடு பூராகவும் இருந்து இஸ்லாம் பாட பயிற்சிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வடமாகாணத்தில் உள்ள கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருப்பதாகவும், இது வர்த்தமானி அறிவித்தலுக்கு முரணானவை எனவும், ஆசிரியருக்கு செய்கின்ற அநீதி எனவும் கூறுகின்றனர்.

மேலும், இஸ்லாம் பாட பயிற்சிநெறி, இல்லாத கோப்பாய் கலாசாலைக்கு ஆசிரியர்கள் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன எனவும் இவர்கள் வினவுகின்றனர்.

இதேபோன்று, ஆரம்பக் கல்வி, ஆங்கிலம், உடற்கல்வி, தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கும் கோப்பாய், மட்டக்களப்பு மற்றும் கொட்டகலை ஆகிய கலாசாலைகளுக்கு நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில், கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *