யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி!

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொக்குவிலில்  அமைந்துள்ள செல்வா பலசில் 2 ஆவது  சர்வதேச சதுரங்க போட்டியானது இனிதே  நடைபெற்று முடிந்துள்ளது.  கடந்த நவம்பர் மாதம்  30 ஆம் திகதி  ஆரம்பமான இச் சதுரங்க போட்டியானது  நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

இப்போட்டியில் எழுநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியா,ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் வயது பால் வேறுபாடின்றி  கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து முதல் தர சதுரங்க வீரர்கள் பதினைந்து பேருக்கும் மேல் இப்போட்டியில் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்து சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் வெற்றி வீரராக சம்பியன் பட்டத்தை இந்தியாவின்   நுபைர்ஷா ஷேக் மொஹம்மது வென்றார்.இவருக்கு வெற்றிகேடயம்இ பதக்கத்தோடு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம்  ரூபாய் பெறுமதியான காசோலை என்பன வழங்கப்பட்டன.

இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ் மாவட்ட சதுரங்க வீரர் சிவதனுஜனுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் காசோலையும் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட இந்தியாவின் பிரஜ்வால் பிஷெட் க்கு ரூபாய் ஒரு இலட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

இதேவேளை பெண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த ஐனந்தினி அபயசிங்க சம்பியன் பட்டத்தை வென்றார். இத்தோடு போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் வென்ற வீரர்களுக்கும் பண பரிசுகள் இ பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்க பட்டது.

நிறைவு நாளில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் சி.ஹசிறிசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக  இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் தலைமை அதிகாரி திரு ராம் மகேஷ். அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டமைக்கு  லைக்கா ஞானம் பவுண்டேஷன் மற்றும்  உள்நாட்டு,வெளிநாட்டு நலன் விரும்பிகள் வழங்கிய ஒத்துழைப்பே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply