ஒழித்து வைத்த அரிசி எங்கே? சபையில் எழுந்த கேள்வி; பகிரங்கப்படுத்திய வர்த்தக அமைச்சர்!

 

அதிகார பலத்தை பயன்படுத்தி, ஒழித்து வைக்கப்பட்டுள்ள அரிசியை  வெளிக்கொண்டுவந்து அரிசிப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய(6) பாராளுமன்ற அமர்வின் போது அரிசிப் பற்றாக்குறை தொடர்பில்  ஹர்சன ராஜகருண வர்த்தக அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நத்தார் பண்டிகை காலப்பகுதியில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுவது அரிசிப் பற்றாக்குறை. 

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரிசியாலை உரிமையாளர்களோடு கலந்துரையடியதாக கூறினீர்கள். 

தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

அரிசி ஒழித்து வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆகவே அது தொடர்பாக சட்டத்தை அமுலாக்கம் செய்யவேண்டிய பொறுப்பு உங்களிடம் காணப்படுகிறது. 

நீங்கள் உங்களுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி ஒழித்து வைக்கப்பட்டுள்ள அரிசியை வெளிக்கொண்டுவந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா என கேட்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க,

நாங்கள் பாரிய மற்றும் சிறிய அரிசியாலை உரிமையாளர்களோடு பேசியிருக்கிறோம். பாரிய அரிசியாலை உரிமையாளர்களிடம் அரிசி காணப்படுகிறது. 

அந்த உரிமையாளர்கள் அரிசியை வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைய தினமும் அரிசி விடுவிக்கப்பட்டிருக்கின்றது. 

நாளாந்தம் சதொச ஊடாக அரிசியை விநியோகிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். சந்தைக்கு வழங்குமாறும் கூறியிருக்கின்றோம். 

அதிகபட்சம் நாடு அரிசி 220 ரூபாவுக்கும் சம்பா அரிசி 210 ரூபாவுக்கும் வழங்குமாறும் அறிவித்திருக்கிறோம். 

அவர்கள் அரிசி வழங்குகிறார்களா இல்லையா என்பதை கண்காணிப்பதற்கு எந்தப்பொறிமுறையும் இல்லை எனத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *