15ஆம் திகதி டெல்லி பறக்கிறார் ஜனாதிபதி அநுர? – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தலைமையிலான உயர்மட்ட குழு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதி  இந்தியாவுக்கு  செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் பின்னரான அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி  விஜயத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *