பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட், இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனை அரச அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்குத் தேவையான வைத்திய உபகரணங்களின் தேவைப்பாடுகள் உள்ளன எனவும், அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரச அதிபர் கோரிக்கை முன்வைத்தார்.
மேலும், இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதனிலைச் செயலாளர் வினாவியபோது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு வார காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போல் எதிர்காலத்தில் ஏற்படா வண்ணமிருக்க சீரான வடிகாலமைப்பு முறைகளின் அவசியம் பற்றி தெரிவித்த அரச அதிபர், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசால் இது வரை ரூபா.50 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டது எனவும், இதில் சமைத்த உணவு வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் என்பவற்றுக்காக ரூபா 49 மில்லியன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், ரூபா 1 மில்லியன் உடனடி அனர்த்தத் தணிப்பு வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்ததுடன், எமது அரசிடம் மாவட்டத்துக்கான தேவைப்பாடுகளை முன்வைத்தபோது, நாம் கோரிய நிதி ஒதுக்கீட்டைச் சம்பந்தப்பட்ட அமைச்சு விரைவாக விடுவித்தமையானது மகிழ்ச்சியான விடயம் எனவும் அரச அதிபரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மீள்குடியேற்ற நிலவரங்கள், அஸ்வெசுமத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவு முறைமை, வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை அரச அதிபரிடம் முதனிலைச் செயலாளர் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான வீடமைப்புத் திட்டத்தின் தேவைப்பாடுகளையும் அரச அதிபர் குறிப்பிட்டதுடன் மேலும், மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள் முன்னேற்றகரமாக நடைபெற்று வருவதாகவும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த காணியற்ற குடும்பங்களுக்குக் காணி அரசின் நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டமும் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன், ஒரு நலன்புரி நிலையத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்களே தங்கியிருக்கின்றன எனவும், அவர்களுக்கும் காணிக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், இம் மாத இறுதிக்குள் ஒரேயொரு நலன்புரி நிலையமும் மூடப்படவுள்ளது எனவும் அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பிரிட்டன் தூதரகத்தின் அலுவலர் செல்வி ப்ராக் வேர்தூஸும் உடனிருந்தார்.