தொண்டமான் நிலையத்தில் போதையில் சிக்கிய ஜீவன் கட்சியின் முக்கிய உறுப்பினர்!

 

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய விடுதியில் அலுவலக நேரத்தில் மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எச்சரித்துள்ளார்.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் ‘TVTC’  தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் செயலாளர் பிரதாப் சந்திரகீர்த்தி ஆகியோர் நேற்யைதினம்  திடீர் விஜயத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது, அங்கு இடம்பெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும், பார்வையிட்ட அவர்கள், மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

அதேவேளை, எதிர்வரும் காலங்களில் இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அதிகமான புதிய மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பாக ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, தொழிற்பயிற்சி நிலைய விடுதிக்கு சென்ற பிரதி அமைச்சர், அங்கு மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினரை எச்சரித்துள்ளார்.

அதன்படி நீங்கள் இங்கு இருப்பதற்கு என்ன காரணம் என அமைச்சர் கேள்வி எழுப்பியதற்கு தனக்கு சுகயீனம் காரணமாக இங்கு தாம் இளைப்பாரி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

குறித்த இடத்தில் இளைப்பார முடியாது எனவும்  தங்களின் உடல் நிலை சீராக இல்லாவிட்டால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற முடியும்.

தொழில் நேர காலப்பகுதியில் இது போன்ற விடயங்களை உள்வாங்க முடியாது.

ஆகையால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்

இதேவேளை குறித்த கட்டிடத்தில் உள்ள அறைகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாமல் இருந்த  உபகரணங்கள் சிலவற்றை இனங்கான முடிந்தது.மக்கள் மத்தியில் போய்ச்சேர வேண்டிய உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 

இந் நிலையில் குறித்த கட்டிடத்தில் உள்ள சில அறைகளை பார்வையிட வேண்டும் என அமைச்சர் கோரிய போதும், ஒரு சில அறைகளுக்கு எம்மிடம் சாவிகள் இல்லையென பதில் வழங்கியதை அடுத்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply