வவுனியா முருகன் ஆலயங்களில் குமராலாய தீபம் ஏற்றி விசேட வழிபாடு!

வவுனியாவில் முருகன் ஆலயங்களில் இன்று மாலை குமராலாய தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.  

திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும்.  கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

அந்தவகையில் நாளைய தினம் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் குமராலாய தீபம் இந்து சமய முறைப்படி இன்று ஏற்றி வைக்கப்பட்டது.  வவுனியாவில் உள்ள பல முருகன் ஆலயங்களில் இவ் குமராலய தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிவசிறி பிரபாகரக் குருக்கள் தலைமையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு மத்தியில் விசேட அபிடேக, பூஜை வழிபாடுகளின் பின் குமாரலய தீபம் ஏற்றப்பட்டது. ஆலயத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானையில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சாமி வெளி வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *