மொட்டு கட்சியின் ஆட்சியில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் காரியாலயத்தை மாற்றியமைப்போம்- கீதநாத் கருத்து..!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை தேர்வு செய்தமை வருத்தமளிப்பதாக சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவரால் இன்று(14) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எனும் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடைமுறைகள் குறித்து ஆரம்பம் முதலே கரிசனை கொண்டுள்ளேன். 

யாழ் மாவடட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இதற்கு முன்பு செயற்பட்டவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் தமக்காக தேர்வு செய்த நிர்வாக/அலுவலக அறை மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக எனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் அழுத்தமாக வெளியிட்டுள்ளேன். 

அந்த வகையில், மாற்றம் எனும் எண்ணக்கருவுடன் மக்கள் ஆணையை பெற்ற தேசிய மக்கள் கட்சியில் இருந்து புதிதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர், பழைய தலைவர்கள் சிலரைப் போலவே மாவட்ட நிர்வாக கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மாவட்ட செயலகத்தின் மையத்தில் தனக்கான அலுவலக மையத்தைப் பெற்றிருப்பது மக்களும் நானும் அவர்களிடம் எதிர்பாராத ஒரு செயற்பாடு ஆகும்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமக்கான அலுவலக மையத்தை அவர்கள் தேர்வு செய்வதற்கான இடம் சட்டத்தில் உண்டு என்றாலும், யாழ் மாவட்ட செயலகத்தின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் ஒன்றை தேர்வு செய்ய முன்வருவார் என எதிர்பார்க்கிறேன்.

மேலும், அமைக்கப்படவிருக்கும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் இந்த முறைமை முழுமையாக மாற்றப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அரசியல் தலையீடுகளில் இருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டு , அதிகாரிகள் கௌரவமாகவும், பாரபட்சம் இன்றியும் அனைவருக்கும் சமனான சேவைகளை செயலகத்தினூடாக வளங்கப்பட ஆவண செய்வதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்காக வலுகட்டாயமாக ஓதுக்கப்பட்ட அந்த காரியாலம், மேலதிக அரசாங்க அரசாங்க அதிபருக்கான காரியாலயமாக காணப்படும் நிலையில், சிறீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் குறித்த காரியாலயம் அந்தப் பதவியில் இருப்பவருக்கு மீள வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *