தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

 

பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக தாய்க்கு கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது.

புத்தளம்-கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மந்தித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மூன்று பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த தாயின் பாத வலிக்கான திரவ நிவாரணி மருந்தை சிறு குழந்தை எடுத்துச் சென்றுள்ளது.

அதன் பின்னர் மூடியை கழற்றி குழந்தை குடித்துக்கொண்டிருந்ததை அவதானித்த தந்தை, உடனடியாக அதை அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பெற்றோர் குழந்தையை பரிசோதித்தபோது, ​​சம்பந்தப்பட்ட வலி நிவாரணி திரவம் குழந்தை குடித்துள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எனினும், பெற்றோர் குழந்தையை பாலாவியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குறித்த வலி நிவாரணி திரவம் குழந்தையை மயக்கமடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், பெற்றோர்கள் குழந்தையுடன் மாதம்பே நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், முந்தலம் அருகே குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பெற்றோர் குழந்தையை முந்தலம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முந்தலம் வைத்தியசாலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை உடனடியாக அம்பியூலன்ஸ் மூலம் சிலாபம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், சிலாபம் மருத்துவமனையில், குழந்தையின் ஆபத்தான நிலை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ ஊழியர்களுடன் அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், குழந்தை றிஜ்வே சிறுவர் மருத்துவமனையை நெருங்கிய தருணத்தில் அம்பியூலன்ஸில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவகத்தின் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஜானக பொலொன்வெல மேற்கொண்டுள்ளார்.

இந்த மரணம் மெத்தில் சாலிசிலேட் உட்கொண்டதால் ஏற்பட்டதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *