காத்தான்குடியில் வேகமாக பரவும் டெங்கு; 30 பேர் பாதிப்பு!

 

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பல இடங்களில் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வேகமாக டெங்கு நோய் பரவி வருவதனால், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பாரிய வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூஎல்.நஸுர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை பிரதேசத்துக்கு உட்பட்ட புதிய காத்தான்குடி உட்பட பல்வேறு இடங்களில் 15 பிரிவுகளாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிக்கப்பட்டு தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இப்பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பருவமழை ஆரம்பித்திருப்பதால் மாவட்டத்தில் மேலும் பெருமளவில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நஸீர்தீன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *