புத்தாண்டில் பாற்சோறு தயாரிப்பதற்கு அரிசிக்கு தட்டுப்பாடு! குற்றம்சாட்டும் அரிசி வர்த்தகர்கள்

 

சந்தையில் நாட்டு அரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பது இலங்கையர்களுக்கு கடினமாக இருக்கும் என மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி பற்றாக்குறை மற்றும் முன்னணி ஆலை உரிமையாளர்கள் கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாடு அரிசியை நுகர்வோருக்கு கிலோவுக்கு 225 ரூபாய் மொத்த விலையிலும், கிலோவுக்கு 230 ரூபாய் சில்லறை விலையிலும் விற்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதுவரை 75,000 தொன்களுக்கு மேல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், வர்த்தகர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்க மறுப்பதால், பற்றாக்குறை குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரிசி வர்த்தகம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்க உறுப்பினர் ரணசிங்க கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பற்றாக்குறைக்கு பொறுப்பல்ல என்றாலும், பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரிசி மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோருகின்றனர். இந்த வரி இப்போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாயாக அறிவிடப்படுகிறது.

இதற்கிடையில், பச்சை அரிசி மற்றும் நாட்டு அரிசிக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும், மற்ற வகைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *