கிளிநொச்சியில் மாயமான மோட்டார் சைக்கிள்; கைவரிசை காட்டிய சிறுவர்கள்..!

கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை கொம்படி அம்மன் கோவிலுக்கு முன்பாக நேற்றையதினம்(30) கடற்கரையோரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

இருப்பினும் குறித்த பகுதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி என்பதால் இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸாரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராசா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மருதங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் இன்றையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் சிறுவர்கள் என்பதனால் அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *