நாட்டை நிர்வகிப்பதற்கு மாத்திரமல்ல : அனைத்து துறைகளுக்கும் அனுபவம் அவசியமானது – வஜிர

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை அனுபவமில்லாத அணியொன்றுக்கு மக்கள் பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள். இதன் பெறுபேறு மிகவும் பயங்கரமானதாகும். இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்போது ஐக்கிய தேசியக் கட்சி சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தயாராக இருக்கின்றதென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வங்குரோத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்று, குறுகிய காலத்துக்குள் ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட்டுவதற்கு முன்னர் அதற்கு தேவையான சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டார். அதன் பின்னரே நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அதன் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனால் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அவ்வாறே மேற்கொள்வதாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க அனுமதித்துக்கொண்டு புதிய சட்டங்களை அவ்வாறே முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக பாராளுமன்ற வரவு செலவு திட்ட காரியாலயத்தை உயிர்ப்பிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதேபோன்று ஊழல் மோசடி எதிர்ப்பு சட்டம் போன்றவற்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டங்களில் ஒன்றையேனும் அரசாங்கம் மீறினால் நாடு வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும்.

என்றாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்தில் அதன் நடவடிக்கைகளை பார்க்கும்போது புதிய மாற்றம் என எதனையும் காணவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தையே இதுவரை பின்பற்றி செல்கிறது. அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிவியை கைவிட்டு செல்லும்போது, அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாடு நெருக்கடிக்குள்ளாகும்போது எந்த சந்தர்ப்பத்திலும் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அரசியல் அனுபவம், ஆட்சி செய்த அனுபவம் மிகவும் முக்கியமாகும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அரசாங்கம் 2025ஆம் ஆண்டை ஆரம்பிக்க வேண்டும் என நாங்கள் பிராத்திக்கிறோம். நாட்டை நிர்வகிப்பதற்கு மாத்திரமல்ல, அனைத்து துறைகளுக்கும் அனுபவம் முக்கியமாகும்.

என்றாலும் 2025ஆம் ஆண்டு எங்களது பொறுப்பை எந்தவிதமான அனுபவமும் இல்லாத அணியொன்று பொறுப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பெறுபேறு மிகவும் மோசமானதாகும். அதுதொடர்பில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த பெறுபேறு மிகவும் மோசமான நிலைக்கு வரும்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எம்முடன் ஒன்றிணையும் அணிகளுடன் சவால்களை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *