அலடுவவில் ஒரு வருடத்திற்கு முன் ஆலயத்தில் : திருடப்பட்ட வலம்புரி சங்கு மீட்பு!

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடங்கொடை அலடுவ பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் திருடப்பட்ட வலம்புரி சங்கு அதே ஆலயத்தின் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மிகவும் பெறுமதியான இந்த வலம்புரி சங்கு திருடப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்தது. 

நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வலம்புரி சங்கை திருடிய நபர் குறித்த தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். 

அவரை கண்காணித்து வந்த போலீசார் கைது செய்ய சென்றபோது, ​​அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். குறித்த நபரின் வீட்டில் பல தடவைகள் பொலிஸார் சோதனையிட்ட போதும் வலம்புரி சங்கை காணவில்லை. 

இதேவேளை, நேற்று (03) களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், குறித்த ஆலயத்தின் கிணற்றின் அடிப்பகுதியில் வலம்புரி ஒன்று காணப்படுவதாக தெரியவந்துள்ளது. 

அதன்படி வலம்புரி சங்கு மீட்கப்பட்டதுடன், இது ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது ஆலயத்தில் திருடப்பட்ட வலம்புரி என ஆலயத்தின் தலைவர் அடையாளம் காட்டினார். 

எனினும் வலம்புரியை திருடிய நபரே விலையுயர்ந்த கற்களை அகற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *