புத்தளத்தில் அம்பியூலன்ஸ் விபத்து; சாரதி வைத்தியசாலையில்..!

புத்தளம் – வனாத்தவில்லு வீதியில் 10ம் கட்டை பகுதியில் நேற்று மாலை அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

எனினும் குறித்த அம்பியூலன்ஸில் சாரதியை தவிர, வேறு யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வனாத்தவில்லு பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த அம்பியூலன்ஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வனாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து மருத்துவர் ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டு, 

சிகிச்சை முடிந்த பின்னர் அந்த மருத்துவரை மீண்டும் புத்தளம் வைத்தியசாலையில் விட்டுவிட்டு வனாத்தவில்லு நோக்கி சென்றுகொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *