மின்கட்டணத்தை குறைக்காமல் இருந்திருந்தால் இன்றும் மின் துண்டிப்பு தொடர்ந்திருக்கும்! சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்

2022 ஆம் ஆண்டு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமலிருந்திருந்தால் இன்றும் மின்விநியோக துண்டிப்பு தொடர்ந்திருக்கும் என முன்னாள் மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது நாணய நிதியத்தை தவிர்த்து மாற்று வழியில்லை என்று குறிப்பிடுகிறார். 

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். 

இதனால் தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையாக ஆதரவளித்தார்கள். 

தற்போது மின்கட்டண குறைப்பு இல்லை என்று குறிப்பிடுவது முறையற்றது.

மின்விநியோக துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

மக்கள் போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி வன்முறை போராட்டமாக மாற்றியமைத்து அரசியல் இலாபம் தேடிக்  கொண்டது.

2022 ஆம் ஆண்டு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமலிருந்திருந்தால் இன்றும் மின்விநியோக துண்டிப்பு தொடர்ந்திருக்கும். 

மின்கட்டணத்தை குறைப்பதற்கு சாத்தியமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னரே அரசாங்கத்தை ஒப்படைத்தோம். 

எரிபொருள் இறக்குமதியின் போது 50 ரூபாய் மேலதிக வரி அறவிடப்படுகிறது. 

அந்த வரியை அப்போதைய அமைச்சர் காஞ்சன விஜேசேகர பெற்றுக் கொண்டார் என தேசிய மக்கள் சக்தியினர் குற்றஞ்சாட்டினார்கள். தற்போது காஞ்சன விஜேசேகர அமைச்சரல்ல.

ஆகவே அந்த 50 ரூபாய் வரியை நீக்கி அதன் பயனை அரசாங்கம் மக்களுக்கு வழங்கலாம் என அவர் மேலும்  தெரிவித்தார்.

Leave a Reply