குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – சமன் ரத்னப்பிரிய

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்த நாட்டுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் இன்னும் நாட்டுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ  அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலங்களில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டதுடன் அந்த ஒப்பந்தங்களின் நன்மைகள் தொடர்பில் அரசாங்க ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துவது வழமை. ஆனால் அவ்வாறான எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

ஆனால் அரசாங்கம் சீனாவுடன் 15 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. 

அதனால் அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லாமையால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. 

அதனால் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி திகழ்ந்து வருகிறது.

தேசிய  மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களை கடந்துள்ள நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற அவர்களுக்கு முடியாமல் போயிருக்கிறது. அதேநேரம் அரச துறைகள் அனைத்தும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. மக்களுக்கும் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம்தான் தற்போது நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றுவரும் கூட்டுறவு சங்க தேர்தலாகும். அதிகமான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *