கோர விபத்துக்கள் – சகோதர சகோதரிகள், பொலிஸ் சார்ஜன்ட் பலி

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை – பொலன்னறுவை வீதியில் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அருகில் நேற்று மோட்டார் சைக்கிளொன்று இராணுவ கெப் வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மின்னேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹபரணையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த் திசையில் வந்த இராணுவ கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து ஹிகுரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சடலம் ஹிகுரக்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நிகவெரடிய – சியம்பலங்கமுவ வீதியில் தலகொலவெவ பஸ் நிறுத்தத்திற்கு அருகில், மஹவவிலிருந்து நிகவெரடிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியின் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் பயணித்த பெண் பலத்த காயமடைந்து இருவரும் மஹவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 22 மற்றும் 31 வயதுடைய இபலோகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *