அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு – பொலிஸார் வெளியிட்ட தகவல்

நாட்டின் சில பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சடலங்கள் நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

கிரியெல்ல பொலிஸ் பிரிவின் குருகம்மோதர பகுதியில் உள்ள களுகங்கையில் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று மதியம் கிரியெல்ல பொலிஸ்  நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, முன்னெடுத்த விசாரணையில் சடலத்தின் எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், தலை பகுதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் ஒரு ஆண் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இறந்தவர் வெளிர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,  மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் காணப்படுவதாக நேற்று மாலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து மில்லனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், ஏனைய பகுதியில் எலும்புக்கூடு எச்சங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்டசின்ன உப்போடை  வாவியில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணையில் இறந்தவர் 60-70 வயதுக்குட்பட்ட மெலிந்த உடலமைப்பு கொண்ட பெண் என்பது தெரியவந்தது.

அவர் இறுதியாக வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கலந்த கவுன் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *