நீலாவணையில் மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி

கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

கிளீன் சிறீலங்கா தொடர்பாக  பாராளுமன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது, விசேடமாக கிளீன் ஸ்ரீலங்காவின் ஊடாக இந்த நாட்டை சிறப்பாக நடத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னாலான அனைத்து ஒத்துழைப்பையும் நான்  வழங்குவதற்கு தயாராக இருப்பதோடு, நேற்று (21) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி கிட்டத்தட்ட 500 பேருக்கு மேற்பட்டவர்கள் மதுபானசாலையை ஒழிப்பதற்காக கிளீன்  ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒரு முன்னேற்பாடாக அந்த இடத்திலேயே மக்கள் விசேடமாக மதுபானசாலை நீலாவனையிலே அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இந்த மதுபானசாலை அந்த இடத்திலே அமைக்கப்படும் என்றால் அங்கே இருக்கின்ற பாடசாலை மாணவர்கள், அதேபோல் அங்கே உழைக்கின்ற உழைத்து அன்றாடக் கூலி வேலை செய்கின்ற வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்ற  சூழ்நிலை, சந்தர்ப்பம் ஏற்படக்கூடிய  வாய்ப்புண்டு.

அதேபோல், இளம் மாணவர்கள் பாதிப்படைகின்றார்கள். இதை நீங்கள் ஏதோ ஒருவகையில் உங்களது சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.   

கடந்த 3 மாதத்துக்கு முன் நீலாவணையிலே அந்த மதுபானசாலை திறக்கப்பட்டிருந்தது. மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மக்கள் எதிர்ப்பு செய்ததன் காரணமாக அது மூடப்பட்டிருந்தது, ஆனால் தற்பொழுது அதனை திறப்பதற்காக அந்த kegalle Beverage லிமிடெட் என்ற மதுபானசாலை கம்பெனியானது, திறப்பதற்காக அதன் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

ஆகவே, அந்த மக்கள் மதுபானசாலையை இல்லாமல் செய்வதற்காக கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலே ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலையில், அவர்களுக்குரிய  ஒத்துழைப்பை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். 

ஏனென்றால் இந்த அரசு வருகின்ற பொழுது மதுபான சாலைகளுக்கு கொடுத்த அனுமதிப்பத்திரத்தை நாங்கள் ஒழிப்போம், மதுபானசாலைகளை இல்லாமல் செய்வோம் என்று சொல்லிவிட்டு   வந்த பின்பு பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்தது.  

இன்று மதுபானசாலையை அமைப்பதற்கான நடவடிக்கை அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமைப்பாடு உங்களுக்குள்ளது. ஏனென்றால் பொருளாதாரத்திலே பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்துகின்றது. மாணவர்கள்  பாதிப்புக்குள்ளாக நேரிடுகின்றது. அதேபோல் அன்றாடக் கூலித் தொழில்கள் செய்கின்றவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.  

தென் பகுதியிலே இருக்கின்ற மதுபானசாலை உரிமை பத்திரத்தில் இருக்கின்றவர்கள்  கல்முனை பிரதேசத்திலே வந்து  மதுபானசாலை அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே அரசு இதனைக் கருத்தில் கொண்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நீங்கள் பழைய ஆட்சிக்காலத்திலே  செய்யப்பட்ட தவறுகளை  நிவர்த்தி செய்வதற்காகத்தான் உங்களுக்கு  மக்கள் 159 பிரதிநிதித்துவ ஆணையை தந்திருக்கிறார்கள்.

விசேடமாக எமது மக்கள் உங்களுக்காகத்தான் கூடுதலான வாக்குகளை அளித்தார்கள். ஆனால் தற்போது ஏமாற்றத்தை சந்தித்த வண்ணம் இருக்கின்றார்கள்.  மேலும் ஆலயடிவேம்பு பிரதேசத்தில் இருக்கின்ற  பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான இரண்டு காணிகள், மட்டுமல்ல, 100X40 அளவிலான இரண்டு கட்டடங்களில் 2020ஆம் ஆண்டு முகத்துவாரத்திலே இருக்கின்ற இலங்கை தரைப்படையானது,    இயக்குனர் சபையினதும்  பொதுச் சபையினதும் அனுமதி இல்லாமல்  வலுக்கட்டாயமாக அந்த காணிகளையும் கட்டடத்தையும் அபகரித்தார்கள்.

கிட்டத்தட்ட 1969ஆம் ஆண்டில் இருந்து அதனை பல் நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் பராமரித்து வந்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கூட்ட தீர்மானத்தின் ஊடாக பல  கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து இருக்கிறார்கள் . அதேபோல் 1991ஆம் ஆண்டு நெல் கொள்வனவு செய்து சுத்திகரிப்பதற்காக 

இயந்திர உபகரணங்களை அமைத்திருந்தார்கள். ஆனால் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலே படையினர் அந்த காணியை அபகரித்து இருப்பது உண்மையாக கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

அந்தக் காணி ஆலயடி வேம்பு பொதுமக்களுக்குரிய சொத்து பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குரிய சொத்து . அவர்களுடைய சந்தா பணத்திலிருந்து வந்த சொத்து. அதுமட்டுமல்ல, அவர்கள் நெல்லை கொள்வனவு செய்து குறைந்த, கட்டுப்பாட்டு விலையிலே 

அரிசியினை அரசாங்க அதிபர், அதே போல் பிரதேச செயலாளர், கூட்டுறவு ஆணையாளர் என்போரின் அனுமதியோடு பொதுமக்களுக்காக அதை விநியோகித்திருந்தார்கள். 

ஆனால் 2023 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் 2010 ஆம் ஆண்டு  தரைப்படையின்  தலைமையலுவலகமானதுஅந்தக் காணியை  கொடுக்கும்படி இராணுவ தலைமையகத்துக்கு தகவல் அனுப்பியிருந்தது. அதேபோல்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த அறிவுறுத்தலை விடுத்திருந்தார்.அது மட்டுமல்ல இராணுவ கட்டளைத் தளபதி கூட அதனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு க்கு திருப்பி வழங்கியருந்தார். 

எனவேதான், இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அதனை மக்கள் செயற்பாட்டிற்காக மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *