இ-டிக்கெட் மோசடி- மேலும் இருவர் கைது!

எல்ல உள்ளிட்ட மலையக மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இதுவரை மொத்தமாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ரயில்வே திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 92 இ-டிக்கெட்டுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணையின் போது, ​​சந்தேகநபர் இ-டிக்கெட்டுகளை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்க எண்ணியதாகத் தெரியவந்தது. இ-டிக்கெட் மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரும் மாத்தளை பிரதேசத்தில் நேற்று கைது கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கண்டியில் 37 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 29 ரயில் இ-டிக்கெட்டுகள் மற்றும் 130,670 ரூபா ரொக்கப் பணம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மலையக மார்க்கங்களூடான இ-டிக்கெட் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிரபல சுற்றுலாப் பாதைகளுக்கான இ-டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளில் வியக்கத்தக்க வகையில் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஜனவரி 20 அன்று சிஐடியினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சில குழுக்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக 2,000 ரூபாவான டிக்கெட் விலை மறுவிற்பனை மூலமாக 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *