புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு நிர்ணயித்திருந்தாலும், தற்போதும் கூட கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ள மக்கள் 3 அல்லது 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடி வரும் ஏராளமானோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதிய கடவுச்சீட்டு தயாரிப்பதில் இருந்து மேற்கொண்டு எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பினார்.
விண்ணப்பதாரர் ஒருவர் கடவுச்சீட்டைச் பெற எடுக்கும் நேரம், தினசரி வழங்கப்படும் மற்றும் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுக்களில் சராசரி எண்ணிக்கை, அத்துடன் இந்த கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தடங்களை ஏற்படுத்தியுள்ள காரணங்கள், இயல்புநிலைக்கு திரும்ப எதிர்பார்க்கப்படும் காலம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜனவரி 2024 முதல் இன்று வரை கடவுச்சீட்டுக்களைப் பெற பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை, வழங்க வேண்டியள்ள எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் இருக்கும் எண்ணிக்கை, தற்போது கடவுச்சீட்டுகளை வழங்கும் சேவை வழங்குநர் யார்? குறித்து கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பான விலைமனு கோரல் தொடர்பான தகவல்களை சபையில் சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என்ற படியால், இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால், எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனடியாக பதில் வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.