தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்! வந்தது புதிய கொள்கை

 

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர், பிரதேச செயலாளரிடமும், தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை புதிய கொள்கையை அறிவித்துள்ளது.

இந்த தீர்மானம்  ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சபையின் ஆலோசகர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், தென்னை பயிரிடப்பட்ட நிலங்களை ஒரு ஏக்கருக்கு மேல் ஏலம் விடுவது அல்லது பிரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, விவசாய நில பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

மேலும், ஒரு ஏக்கருக்கு மேல் தென்னை பயிரிடப்பட்ட நிலங்கள் வேறு திட்டங்களுக்காக மீளப் பயன்படுத்தப்பட வேண்டுமானால், தென்னை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் அல்லது தொடர்புடைய அரசாங்க அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வுக்குப் பின்னர் அனுமதி தேவைப்படும்.

முன்னர் 10 ஏக்கருக்கும் குறைவான காணிகளை ஏலம் விடுவதற்கு காணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென்னை அபிவிருத்தி சபையினால் இந்த அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. 

புதிய விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன, மேலும் எதிர்காலத்தில் இந்த மாற்றங்களை பாராளுமன்றத்தில் திருத்தங்களாக முன்வைக்க தெங்கு அபிவிருத்தி சபை தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *