யோஷித ராஜபக்ச விளக்கமறியலில்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும்  27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இன்று(25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர், சந்தேகநபர் இன்று மாலை கொழும்பு மேலதிக நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, யோஷித ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அதற்கு எதிராக சாட்சியங்களை வழங்கிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதால், பிணை கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான், சந்தேகநபரை எதிர்வரும்  27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, யோஷித ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக இன்று மாலை நாமல் ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கொழும்பு சிஐடி பிரிவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *