
இலங்கை முஸ்லிம்கள் தமது நீண்ட கால வரலாற்றில் அவர்களுடைய நடை, உடை, மதம் சம்பந்தமாக பல விதமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். போர்த்துக்கேயர் கி.பி.1505 இல் இலங்கைக்கு வந்த காலகட்டத்தில் கூட, கொழும்பில் அச்சமயம் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களுடைய விவகாரங்களில் அவர்களுடைய தனிப்பட்ட சட்டமே அமுல்படுத்தப்பட்டதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதேபோல் அவர்களின் பின்வந்த டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரும் முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்களை அங்கீகரித்து அவை தழுவிய சட்டங்களை இயற்றி முஸ்லிம்களின் தனித்துவத்தை கௌரவித்தனர்.